அமெரிக்கா, பிப்ரவரி 2 – சமூக ஊடகங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தீங்கிழைப்பதாக கூறியுள்ள பெற்றோர்களிடம், மெட்டாவின் தலைமை செயல்முறை அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில், அமெரிக்க மேலவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது மார்க் ஜுக்கர்பெர்க் பேசினார்.
அந்த விவாதத்தில், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் தலைமை செயல்முறை அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கை தவிர்த்து, டிக் டொக், Snap, X உட்பட இதர ஐந்து முன்னணி சமூக ஊடக நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
நான்கு மணி நேரத்திற்கும் கூடுதலாக நடைபெற்ற அந்த விவாதத்தின் போது, சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு எற்படும் பாலியல் தொல்லைகள், வன்முறை பிரச்சனைகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் முன்வைக்கப்பட்டன.
அவற்றை களைய, சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்கள் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டன.
எனினும், சமூக ஊடகங்கள் நன்மையை காட்டிலும் தீமைகளையே அதிகம் விளைவிப்பதாக பெற்றோர்கள் சிலர் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, எழுந்து நின்ற மார்க் ஜுக்கர்பெர்க், சமூக ஊடகங்களால் அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகளுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.