
புத்ராஜெயா, மார்ச் 15 – B40 இந்திய மாணவர்களின் பாலர் பள்ளி கல்விக்காக , மித்ரா – மலேசிய இந்தியர் உருமாற்றத் திட்டப் பிரிவு , 2022 -ஆம் ஆண்டு, 1 கோடியே 30 லட்சத்து 68, 862 ரிங்கிட் மான்யத்தை ஒதுக்கியது.
அந்த அரசாங்க மான்யத்தின் கீழ், 4 வயதிலிருந்து 6 வயதுக்கு உட்பட்ட 5,164 சிறார்கள் பயனடைந்ததாக , பிரதமர் துறையின் கீழ் செயல்படும் மித்ரா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
அந்த மான்யம் 214 பாலர் பள்ளிகளுக்கு 5 அமைப்புகளின் மூலமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
அந்த பொருளாதார உதவி, கல்வி கட்டணத்துடன், புத்தகங்கள், பள்ளிச் சீருடை, எழுதுகோல்கள், பள்ளிச் சிற்றுண்டி ஆகியவற்றை வழங்கவும் பயன்படுத்தப்பட்டது.
அதோடு, மான்யம் பெற்ற பாலர் பள்ளிகள் அந்த நிதியை முறைப்படி பயன்படுத்தி இருப்பதை உறுதிச் செய்வதற்காக தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதோடு, பெற்றோர்களுடன் சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் மித்ரா தெரிவித்தது.
அதோடு, இந்த உதவித் தொகை , பெற்றோர்களிடம் வழங்காமல் நேரடியாக சம்பந்தப்பட்ட பாலர் பள்ளிகளின் நிர்வாகத்திடமே ஒப்படைக்கப்பட்டதாகக் கூறியது.
அண்மையில் , உள்நாட்டு தமிழ் நாளேடு ஒன்று, இந்த உதவித் தொகை பெற்றோரிடம் வழங்கப்படாமல் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டினை முன் வைத்ததை அடுத்து, மித்ரா இந்த விளக்கத்தினை தந்துள்ளது.2022 PRESCHOOL GUIDANCE CLASS PROGRAM ( RM13,068,862.00 )