ஜோகூர் பாரு, டிசம்பர் 20 – ஜோகூர் பாருவில் கடந்த வாரம் கடத்தப்பட்ட தனது மகனை காப்பாற்றும் முயற்சியின் போது, சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமையை வைத்திருக்கும் சீன நாட்டு ஆடவர் ஒருவர் முகத்தில் பலத்த காயங்களுக்கு இலக்கானார்.
டிசம்பர் 12-ஆம் தேதி, மாலை மணி 4.30 வாக்கில், கும்பல் ஒன்று அந்த ஆடவரின் ஏழு வயது சிறுவனை கடத்திச் செல்ல முயன்ற போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக, ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரவுப் செலாமாட் தெரிவித்தார்.
எனினும், சம்பந்தப்பட்ட சீன ஆடவரின் வர்த்தக பங்காளி, இதர மூன்று உள்நாட்டு ஆடவர்களுடன் இணைந்து, மூன்று லட்சம் ரிங்கிட் பிணைப் பணத்திற்காக, சிறுவனை கடத்தியது விசாரணையில் அம்பலமானது.
சாலையோரத்தில் கைவிடப்பட்ட காரிலிருந்து சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்ட வேளை ; பிணைப் பணம் எதுவும் ஒப்படைக்கப்படவில்லை.
கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட அதே நாள் இரவு, அந்த 41 வயது ஆடவன் கைதுச் செய்யப்பட்டு, விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட வேளை ; நேற்று அவனுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டதையும் ரவுப் செலாமாட் உறுதிப்படுத்தினார்.
அவனுக்கு உடந்தையாக செயல்பட்ட இதர மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.