
டென்பாசார், ஆகஸ்ட்டு 29 – இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தீவான பாலியை, 7.1 magnitude சக்தி கொண்ட வலுவான நிலநடுக்கம் உலுக்கியதோடு, அதன் பின்னர் பல முறை நில அதிர்வுகளும் உணரப்பட்டன.
பீதியடைந்த சுற்றுப் பயணிகள் சாலைகளில் திரண்டனர். எனினும், அதனால் மோசமான சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
உள்நாட்டு நேரப்படி, அதிகாலை மணி 3.55 வாக்கில், பாலி தீவின் வடகிழக்கு கடற்கரையிலிருந்து, சுமார் 515 கிலோமீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
பாலியை உலுக்கிய அந்த வலுவான நிலநடுக்கத்தின் அதிர்வுகள், அருகிலுள்ள லோம்போக் (Lombok), சும்பாவா (Sumbawa) தீவுகள் வரை உணரப்பட்டன.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில், 5.4 magnitude சக்தி கொண்ட இரண்டாவது நிலநடுக்கமும் உணரப்பட்டதாக உள்ளுர் மக்கள் சிலர் தெரிவித்தனர்.
அந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து, தங்கும் விடுதிகளிலிருந்து சுற்றுப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்ட வேளை ; சுனாமி அஞ்சத்தால் கடற்கரைகளிலிருந்து மக்கள் வெளியேற்றபட்டனர்.