
கோல சிலாங்கூர் ஜூலை 31- புக்கிட் மெலாவத்தி தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் தீபன் சுப்பிரமணியம் வாக்காளர்கள் மத்தியில் அறிமுகத்தைத் ஏற்படுத்திக் கொள்வதற்காக பிரசுரங்களை விநியோகிக்கும நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்.
நேற்று காலை சுங்கை பூலோ பொது சந்தைக்கு வருகை புரிந்த அவர், பொது மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியதோடு தன்னைப் பற்றிய விபரங்கள் அடங்கிய பிரசுரங்களையும் அவர்களிடம் வழங்கினார். இந்த பயணத்தின் போது கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமதுவும் உடனிருந்தார். புக்கிட் மெலாவத்தி தொகுதியில் தாம் வெற்றி பெற்றால் கோல சிலாங்கூர் வட்டார இளைஞர்கள் எதிர்நோக்கி வரும் வேலை வாய்ப்பு, சமூக நலன், வர்த்தக வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைளுக்கு தீர்வு காணவுள்ளதாக தீபன் முன்னதாக வாக்குறுதியளித்திருந்தார்.
மேலும், இத்தொகுதியில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவது, இணைய சேவையில் காணப்படும் குறைபாடுகளைக் களைவது, பொது போக்குவரத்தை குறிப்பாக எம்.ஆர்.டி. சேவையை கோல சிலாங்கூர் வரை விரிவுபடுத்துவது ஆகிய திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் தீபன் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் நோராஸ்லி யாஹ்யாவிடமிருந்து நேரடிப் போட்டியை எதிர்நோக்குகிறார். இந்த தொகுதியில் மொத்தம் 37,956 வாக்காளர்கள் உள்ளனர்.