
கோலாலம்பூர், ஆக 29 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் வீட்டை வெடிவைத்து தகர்க்கப்போவதாக சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுத்திருந்த ஆடவன் கெடா , பீடோங்கில், Taman Desa Budiman னில் கைது செய்யப்பட்டான். இ.பி.எப் பண விவகாரத்தில் அன்வார் கொடுமை புரிந்துவிட்டதால் அவரது வீட்டை தகர்க்கப்போவதாக அந்த ஆடவன் மிரட்டல் விடுத்திருந்ததாக கூறப்பட்டது.
கோலா மூடா போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த போலீஸ் குழுவொன்று நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் 41 வயதுடைய உடம்பு பிடிப்பாளரான அந்த ஆடவனை கைது செய்தது. Joejebat Tajudin என்ற முகநூல் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட மிரட்டல் தொடர்பாக புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் இயக்குனர் Mohd Shuhaily தெரிவித்திருக்கிறார்.
சம்பந்தப்பட்ட அந்த ஆடவன் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். அந்த நபர் ஏற்கனவே போதைப் பொருள் தொடர்பான மூன்று குற்றங்களில் சம்பந்தப்பட்டவன் என புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Mohd Shuhaily தெரிவித்தார். விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த சந்தேகப் பேர்வழி தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.