கம்போடியா, டிசம்பர் 9 – கம்போடியாவிலுள்ள, தொல்பொருள் தளங்களில் ஒன்றான அங்கோர் வாட் கோவில், உலகின் எட்டாவது அதிசயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் எட்டாவது அதிசயம் என்பது, புதிய கட்டடங்கள் அல்லது திட்டங்கள் அல்லது வடிவமைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற ஓர் அங்கீகாரம் ஆகும்.
இதற்கு முன், இத்தாலியின், பாம்பீ (Pompeii) வசம் இருந்த அந்த அங்கீகாரத்தை தற்போது அங்கோர் வாட் சொந்தமாக்கிக் கொண்டுள்ளது.
சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, உலகின் மிகப் பெரிய மத வழிபாட்டு தளமான அங்கோர் வாட், கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
யுனெஸ்கோவின், உலக பாரம்பரிய தளம் எனும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள அங்கோர் வாட்டின் பிரமிக்க வைக்கும் கட்டட கலையையும், பாராம்பரியத்தையும் கண்டுகளிக்க ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுப் பயணிகள் கம்போடியாவுக்கு வருகை புரிவது வழக்கமாகும்.
12-ஆம் நூற்றாண்டில் சூரியவர்மன் என்ற மன்னனால் அங்கோர் வாட் கட்டப்பட்டது.
அங்கோர் வாட் என்றால், கோவில் நகரம் என பொருள். கம்போடியாவின் தேசிய கொடியிலும், இந்த அங்கோர்வாட் கோவில் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான இதனை கட்ட 40 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.