
கோலாலம்பூர், பிப்ரவரி-5 – மாணவர்களுக்கான பிரம்படி தண்டனையை தலைமை ஆசிரியர்கள் அல்லது அதிகாரம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
அதுவும், பள்ளி ஒழுக்கம் தொடர்பான 1959 ஆம் ஆண்டு கல்வி விதிமுறைகளில் இடம்பெற்றுள்ள கடுமையான வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே அவ்வாறு செய்ய முடியும்.
கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தவறு செய்யும் மாணவர்கள் மீது பிரம்படி உள்ளிட்ட உடல் ரீதியான நடவடிக்கைகளை எடுக்க, பெற்றோர்களுக்கோ பொது மக்களுக்கோ நடப்பு சட்ட விதிகளில் அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் சொன்னார்.
அதே சமயம், பொது இடங்களில் அல்லது பள்ளி ஒன்றுகூடல் இடங்களில் பிரம்படி தண்டனைகள் ஒருபோதும் செயல்படுத்தப்படக்கூடாது;
மாணவிகளையும் பிரம்பால் அடிக்க முடியாது;
மாணவர்களை அடிக்க ஆசிரியர்களுக்கு இருக்கும் அதிகாரம் தொடர்பான சிறப்பு சுற்றறிக்கையில் அவைக் குறிப்பிடப்பட்டிருப்பதை ஃபாட்லீனா சுட்டிக் காட்டினார்.
பகடிவதைக்கு ஆளான மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள், பகடிவதை செய்த மாணவர்களைப் பள்ளியில் காலை ஒன்றுக்கூடல்களில் பிரம்பால் அடிக்க அனுமதிக்க கல்வி அமைச்சு தயாராக உள்ளதா என மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த கெடா, ஜெர்லூன் நாடாளுமன்ற உறுப்பினர் Dr அப்துல் கானி அஹ்மாட் (Dr Abd Ghani Ahmad) அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்.