கோலாலம்பூர், பிப்ரவரி 28 – ரிங்கிட் நாணயம் குறைவாக மதிப்பிடப்பட்டிருப்பதாக பேங் நெகாரா கவர்னர் டத்தோ அப்துல் ரஷீட் காஃப்போர் கூறியுள்ளார்.
மலேசியாவின் நேர்மறையான பொருளாதார அடித்தளத்தையும் வாய்ப்புகளையும் வைத்து பார்த்தால், ரிங்கிட் உண்மையில் இன்னும் உயர்வாக பரிவர்த்தனைச் செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
இதையடுத்து, அந்நிய செலாவணி சந்தையில் தொடர்ச்சியான வரவுகளை ஊக்குவிக்க, பேங் நெகாரா பல்வேறு தரப்புகளுடன் கலந்தாய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
அரசாங்க தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள், வர்த்தக பெருநிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருடன் அந்தக் கலந்தாய்வு நடைபெறுவதாக டத்தோ அப்துல் ரஷீட் சொன்னார்.
ரிங்கிட்டின் திடீர் வீழ்ச்சி மலேசியப் பொருளாதாரத்தின் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என அப்துல் ரஷிட் கடந்த வாரம் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மாறாக, ரிங்கிட்டின் மதிப்பு, இவ்வட்டாரத்தின் மற்ற நாணயங்களைப் போலவே வெளி காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
செவ்வாய்க்கிழமை காலை 9 மணி வரைக்குமான நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4.7770-மாக பதிவாகியிருந்தது.