பெங்களூரு, ஜன 4 – இந்தியாவில் கர்நாடக மாநிலத்திலுள்ள பெலகாவி மாவட்டத்தில் அங்கன்வாடியில் உள்ள தனது தோட்டத்தில் பள்ளி குழந்தைகள் பூக்களை பறித்ததால் ஆத்திரம் அடைந்த அந்த தோட்டத்தின் உரிமையாளர் ஆசிரியை ஒருவரின் மூக்கை வெட்டியுள்ளார்.
பெலகாவி மாவட்டத்தில் உள்ள பசுர்டே கிராமத்தில் இந்த ஈவு இரக்கமற்ற கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. 50 வயதுடைய ஆசிரியை சுகந்தா மோர் ‘Sugandha More’ என்பவருடன் சண்டையிட்டு அவரது மூக்கை பூந்தோட்டத்தின் உரிமையாளர் அறுத்துள்ளார். அதிக ரத்தப்போக்குடன் பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுகந்தாவுக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.
மூக்கில் சில நரம்புகள் அறுபட்டதால் அந்த ஆசிரயைக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. இப்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.
எனினும், காணாமல்போன மூக்குத் துண்டை தம்மிடம் கொண்டு வந்தால் மூக்கை புணரமைக்க முடியும் என அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அந்த ஆசிரியையின் காணாமல்போன மூக்குப் பகுதியை எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லையென அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அந்த சம்பவத்திற்கு பின்னர் தப்பியோடிய தோட்ட உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.