ஷா ஆலாம், டிசம்பர் 5 – சிலாங்கூர், கிள்ளான், பண்டமாரானில், சிமெண்ட் இட்டு புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண், கொலை செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக இருக்கலாம் எனும் சாத்தியத்தை போலீஸ் மறுக்கவில்லை.
அப்பெண்ணை சிமெண்ட் கலவையில் புதைத்ததாக சந்தேகிக்கப்படும் இரு அந்நிய நாட்டு ஆடவர்களை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக, சிலங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.
அவர்கள் இருவரும், பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில், 2019-ஆம் ஆண்டு தொடங்கி 2021-ஆம் ஆண்டு வரைக்கும் வாடகைக்கு தங்கி இருந்தவர்கள் ஆவர்.
ரஞ்சித் சிங் மற்றும் மஞ்சித் சிங் என அடையாளம் காணப்பட்டிருக்கும் அவர்கள் தான், அப்பெண்ணை, வீட்டின் குளியல் அறையில் புதைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக, ஹுசைன் சொன்னார்.
கொலையுண்ட பெண் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
நாளை ஷா ஆலாம் மருத்துவமனையில் சவப்பரிசோதனைக்கு பின் அது குறித்து தெரிய வருமென ஹுசைன் நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வேளையில், அச்சம்பவம் தொடர்பில், 53 வயது அந்நிய நாட்டு ஆடவன் ஒருவன் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும், ஹுசைன் உறுதிப்படுத்தினார்.