ஜோர்ஜ் டவுன், டிச 15 -அணிந்திருக்கும் உடைகளை காரணம் காட்டி மருத்துவமனைகளில் நுழைவதற்கு மக்கள் தடுக்கப்படமாட்டார்கள் என பினாங்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக 72 வயதுடைய லிம் தியன் ஹெங் என்பவர் அரைக்காற் சட்டை அணிந்திருந்ததற்காக செபராங் ஜெயா மருத்துவமனையில் நுழைவதற்கு அதன் பாதுகாவலரால் திங்கட்கிழமையன்று தடுத்து நிறுத்தப்பட்டார். இச்சம்பவம் அபூர்வமாக நடைபெற்றதாகவும் இது வருத்தப்படக்கூடிய ஒன்று என இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார குழுவிற்கான பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் தெரிவித்துக் கொண்டார். மாநிலத்தின் சுகாதார நலன் முறையின் கௌரவத்தை இதுபோன்ற சம்பவம் பாதிக்கச்செய்வதை தாம் விரும்பவில்லையென அவர் கூறினார்.
ஒருவர் அணிந்திருக்கும் உடை காரணமாக மருத்துவமனைகளில் நுழைவதை தடுக்கும் சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டேனியல் கூய் தெரிவித்தார். அரைக்காற் சட்டை, பனியன், குட்டைப் பாவடை மற்றும் கையற்ற மேலாடை அணிந்துகொண்டு மருத்துவமனைக்கு வருகையளிப்பதை உடைகள் நெறிமுறை தடுப்பதாக அந்த பாதுகாவலர் லிம் தியன் ஹெங்கிடம் தெரிவித்திருக்கிறார். இதனிடையே பாதுகாவருக்கும் லிம்மிற்குமிடையே ஏற்பட்ட தவறான புரிந்துணர்வு மற்றும் சரியான தொடர்பின்மையால் அவர் தடுக்கப்பட்டார் என விசாரணை மூலம் தெரியவந்ததாக செபராங் ஜெயா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சைபுல் அஸ்லான் ஷாரீப் கூறினார்.