கோலாலம்பூர், பிப்ரவரி 7 – 2021-ஆம் ஆண்டுக்கும் 2023-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், நாட்டில் ஒரு வாரத்தில் சராசரியாக ஐந்து கொலை சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.
அந்த மூன்றாண்டு காலத்தில், நாட்டில் மொத்தம் 741 கொலைகள் பதிவுச் செய்யப்பட்டதையும் ரஸாருடின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் குறிப்பாக, தகராறு, கருத்துவேறுபாடு, பொறாமை, போதை, பழிவாங்கும் எண்ணம், கடன் பிரச்சனை ஆகிய காரணங்களால் மிக அதிகமான கொலைகள் நிகழ்ந்துள்ளதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில், அந்த கொலைகளுடன் தொடர்புடைய, 177 பெண்கள் உட்பட மொத்தம் ஆயிரத்து 509 பேர் கைதுச் செய்யப்பட்டதையும் ரஸாருடின் உறுதிப்படுத்தினார்.
எனினும், அதில் தொடர் கொலை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட கொலைகள் அனைத்தும் தற்செயலாக நிகழ்ந்தவை என்பது விசாரணையில் தெரிய வந்ததையும் ரஸாருடின் சுட்டிக்காட்டினார்.