பெட்டாலிங் ஜெயா, டிச 22 – DLP, இருமொழிப் பாடத் திட்டங்ளை அமல்படுத்தும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மலாய் மொழி மற்றும் அவர்களின் தாய்மொழியில் அடிப்படைத் தேர்ச்சியை அடையவில்லை என கல்வி கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் கூறியுள்ளார்.
DLP நடைமுறைக்கு ஒப்புக்கொண்ட பள்ளிகள், மலாய் மொழி தேர்ச்சி உட்பட அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
DLP வகுப்புகளை நடத்துவதற்கு, பள்ளிகளில் மாணவர்களின் மலாய் மொழி திறன், தேசிய சராசரியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
அறிவியல் மற்றும் கணிதம் கற்றல், கற்பித்தல் மூலம் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்காகவும், மாணவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் உலக அளவில் போட்டியிடும் திறனை அதிகரிக்க, DLP பாடத்திட்டம், 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் மலாய் மொழியை நிலைநிறுத்தி, ஆங்கில மொழியை வலுப்படுத்தும் கொள்கையின் கீழ் உள்ள முயற்சிகளில் ஒன்றாக அமைகின்றது என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் மாநிலக் கல்வித் துறையின் மூலம் ஒவ்வொரு பள்ளியின் தயார்நிலை மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் பள்ளிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட DLP வகுப்புகளைத் திறக்க அனுமதிக்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
தற்போது, DLPக்கு தகுதி பெற, பள்ளிகள் அமைச்சு நிர்ணயித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் குறைந்தபட்ச மலாய் மொழி திறன் தேவையை பூர்த்தி செய்தல், அவசியமாகும் என அவர் கூறினார்.