கோலாலம்பூர், டிச 14 – ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்ட நீரோடைப் பகுதியில் காலுறை ஒன்றை போலீசார் நேற்று மீட்டனர். எனினும் அந்த காலுறை ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஜெய்ன் ரய்யானுக்கு சொந்தமானதா என்பதை கண்டறிவதற்காக ஆய்வு கூட பரிசோதனைக்கு அனுப்பப்படும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார். ஒரு ஜோடி காலுறையில் ஒன்றை மட்டுமே நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அந்த காலுறை ஜெய்ன் ரய்யான் அணிந்திருந்ததா என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாக அவர் கூறினார். இதனிடையே கொலை செய்யப்பட்ட ஜெய்ன் ரய்யான் உடல் கண்டுப்பிடிக்கப்பட்ட நீரோடைப் பகுதியில் ஆதாரங்களை தேடுவதற்காக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத்துறை மற்றும் வடிகால் நீர்ப்பாசணத்துறையின் உதவியும் நாடப்பட்டதாக ஹுசைன் தெரிவித்தார்.
டாமன்சரா டமாயைச் சேர்ந்த சிறுவன் ஜெய்ன் ரய்யான் டிசம்பர் 5ஆம் தேதி காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டான். மறுநாள் டிசம்பர் 6ஆம் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலிருந்து 200 மீட்டர் தூரத்திலுள்ள நீரோடைப் பகுதியில் அச்சிறுவனின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. கழுத்து நெறிக்கப்பட்டு ஜெய்ன் ரய்யான் கொலை செய்யப்பட்டதாக அவனது உடலில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.