ஷா அலாம், டிச 22 – 2021 ஆம் ஆண்டு நடந்த தீ விபத்தில் பட்டறை மேலாளர் கண்ணதாசன் வீராசாமி கொல்லப்பட்டது தற்கொலைதான் என மரண விசாரணை நீதிமன்றம் முடிவு செய்துள்ளது . மாறாக கண்ணதாசன் மரணத்திற்கு வேறு எவரும் காரணம் இல்லையயென மரண விசாரணைக்கு தலைமையேற்ற ரசிஹா கஸாலி தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியன்று புக்கிட் பூச்சோங்கில் கார் கிடங்கு தீப்பற்றியதில் கண்ணதாசன் கொல்லப்பட்டார். ஆனால் அங்கு தீயை பற்றவைத்தது கண்ணதாசன்தான் என மரண விசாரணையின் மூலம் தாம் முடிவுக்கு வந்ததாக Rasyihah Ghazali கூறினார். மரண விசாரணையின்போது பல சாட்சிகள் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தின்படி நிதி நெருக்கடியின் காரணமாக 34 வயதுடைய கண்ணதாசன் தற்கொலை செய்துகொண்டார் என்பதை தாம் கண்டறிந்ததாக மரண விசாரணை தலைவர் கூறினார்.
சம்பவம் நடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் தமது முதலாளிக்கு சொந்தமான 57,000 ரிங்கிட்டை கண்ணதாசன் முறைகேடு செய்துள்ளார் என்ற தகவலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த பணத்தை ஒரு மாதத்திற்குள் திருப்பித் தந்துவிடுவதாக கண்ணதாசன் கூறியதாகவும் ஆனால் அவர் அவ்வாறு அந்த பணத்தை திரும்ப ஒப்படைக்கவில்லையென நிதி நிர்வாகி லிம் போ செங் வழங்கிய சாட்சியத்தையும்ரசிஹா கஸாலி சுட்டிக்காட்டினார். கண்ணதாசன் தமது நண்பரிடமிருந்து கூட 19,000 ரிங்கிட் கடன் பெற்றுள்ளார். அதோடு கண்ணதாசன் எழுதிவைத்திருந்த தற்கொலை குறிப்பையும் நீதிமன்றம் கண்டறிந்தது . அந்த தற்கொலை குறிப்பு கண்ணதாசன் கையெழுத்துத்தான் என்பதை கையெழுத்து நிபுணரின் சாட்சியத்தின் மூலம் தெரியவந்தாகவும் ரசிஹா கஸாலி தெரிவித்தார்.