புத்ராஜெயா, ஜனவரி 1 – தீபகற்ப மலேசியாவிலும், சபாவிலும், தற்சமயம் மாநில தேர்தல் எல்லைகளை மறுவரையறுக்கும் திட்டம் எதுவும் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை.
எனினும், சரவாக்கில், தேர்தல் எல்லைகளை மறுசீரமைப்பது குறித்து, தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருவதாக, அதன் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சாலே தெரிவித்தார்.
மாநில தேர்தல் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்ட நாளிலிருந்து, எட்டாண்டுகள் நிறைவடைந்த பின்னரோ ; அல்லது மக்களவை – சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டாலோ, மாநில தேர்தல் எல்லைகளை மீண்டும் மறுநிர்ணயம் செய்ய முடியும்.
ஆகக் கடைசியாக, 2018ஆம் ஆண்டு, மலாயா மாநில தேர்தல் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டன. அதே சமயம், சபா, சரவாக் மாநிலங்களுக்கு முறையே 2017ஆம் ஆண்டும், 2015ஆம் ஆண்டும் தேர்தல் எல்லைகள் மறுவரையறை செய்யபட்டன.
எந்தவொரு எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கையும், மக்களவை தலைவர் மற்றும் பிரதமருக்கு அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னரே தொடங்கப்படும் என்பதையும், அப்துல் கானி சுட்டிக் காட்டினார்.