பூலாய் நாடாளுமன்ற தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக் கொண்டது

ஜொகூர் பாரு, செப் 9 – Pulai நாடாளுமன்ற தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக் கொண்டது. அந்த தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளரான Suhaizan Kaiat 18,641 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த இடைத் தேர்தலில் Suhaizan Kaiat மொத்தம் 48,283 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியைச் சேர்ந்த Zulkifli Jaafar 29,642 வாக்குகளையும் சுயேச்சை வேட்பாளர் Samsudin Mohamad 528 வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டனர். பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹாய்சன் ஒட்டுமொத்தமாக 62 விழுக்காடு வாக்குகளை பெற்றார்.
கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சலாஹூடின் அயோப் பெற்ற 55.5 விழுக்காடு வாக்குகளைவிட இது அதிகமாகும். Pulai நாடாளுமன்ற தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக் கொண்டதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இடத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கம் நிலைநிறுத்திக் கொண்டது.