ஷரியா நீதிமன்றங்களின் அதிகாரத்தை மறுஆய்வு செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள 11 பேர் அடங்கிய செயற்குழுவில் மலாய்க்காரர் அல்லாத அரசியலமைப்பு சட்ட வல்லுனர்களும் இடம் பெற்றிருப்பது அவசியம் என பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கே கூ ஹம் கூறிய பரிந்துரை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அச்செயற்குழுவின் உண்மை அதிகாரம் புரியாமல் அவர் அவ்வாறு பேசியுள்ளதாக DAP-யின் தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவுத்துள்ளார்.
ஷரியா நீதிமன்றங்கள் மலாய்க்காரர் அல்லாதவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய அந்த செயற்குழுவில் மலாய்க்காரர் அல்லாதவர் இடம் பெற வேண்டும் என ங்கே கூறியிருந்தார். அதற்கு அம்னோ தலைமைச் செயலாளர் அஷ்ராப் வஜ்டி டுசுகி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிலாங்கூர் சுல்தான் தலைமையில் இயங்கும் இஸ்லாம் சமய விவகார மன்றத்தினால் உருவாக்கப்பட்ட அந்த செயற்குழு கொடுக்கின்ற பரிந்துரைகள் சட்டமாக்கப் படுவதற்கு முன்பு அமைச்சரவையின் ஒப்புதலுக்கும் சட்டத்துறையின் ஆய்வுக்கும் உட்படுத்தப்படும் என அந்தோனி லோக் கூறியுள்ளார்.
அதனால் மலாய்க்காரர் அல்லாதவர்களின் சுதந்திரமும் நலனும் பாதிக்கப்படும் என அஞ்சத் தேவையில்லை. முறையான ஆலோசனை மற்றும் ஒப்புதலுக்குப் பின்னரே ஷரியா நீதிமன்றங்களின் அதிகாரத்துக்கான சட்டம் இயற்றப்படும் என்றார் அவர்.
சிலாங்கூர் சுல்தானின் விவேகத்தில் தமக்கு நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார்.
ங்கேவின் கருத்து சர்ச்சை கிளப்பும் எனவும் ஒப்புக் கொண்ட அவர் DAP ஒரு போதும் இஸ்லாமியர் விவகாரங்களில் தலையிடாது என தெரிவித்தார்.