புத்ராஜெயா, ஜனவரி 30 – பஹாங், கேமரன் மலையில், இம்மாதம் 26-ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்திற்கு, தொடர்ச்சியாக பெய்த மழைதான் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த நிலச்சரிவு சம்பவத்தின் விளைவாக ஐவர் உயிரிழந்தனர்.
அந்த நிலச்சரிவுக்கான காரணத்தை கண்டறிய, JMG எனும் மலேசிய கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை விசாரணை நடத்தியதாக, இயற்கை வள சுற்றுசூழல் அமைச்சு இன்று ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
இம்மாதம் 24-ஆம் தேதி மாலை மணி மூன்று தொடங்கி, இடைவிடாது அடை மழை பெய்தது.
அதனால், 25-ஆம் தேதி, தினசரி மழை 126 மில்லிமீட்டர் வரை பதிவானதே அந்த நிலச்சரிவுக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த தொடர் மழையால், கிரானைட் பாறைகளை தளமாக கொண்ட செங்குத்தான இயற்கை சரிவுகள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, ஜனவரி 26-ஆம் தேதி, கேமரன் மலை, ப்லூ வேலியில் நிகழ்ந்த நிலச்சரிவில், ஐநாவின் அகதிகள் அட்டையை கொண்டிருந்த ஐந்து மியன்மார் நாட்டவர்கள் புதையுண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.