கோலாலம்பூர், டிச 13 – புதிதாக நேற்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவை அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரை செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இனிமேலும் தமது அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படாது என்றும் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமாக தங்களது பணியை மேற்கொண்டு வருவார்கள் என பிரதமர் கூறினார்.
அமைச்சரவை குறித்து புதிய விவகாரங்கள் எதுவும் வராது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதன்வழி அடுத்த பொதுத் தேர்தல்வரை நாம் திட்டமிடப்பட்ட மற்றும் வாக்குறுதி அளிக்கப்பட்ட செயல் நடவடிக்கைகளை விவேகமான முறையில் நிறைவேற்ற முடியும் என அவர் தெரிவித்தார். மேலும் ஆக்கப்பூர்வமான நிர்வாகத்தை உறுதிசெய்வதற்கு அமைச்சரவை மாற்றம் அவசியம் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.