புத்ராஜெயா, ஜனவரி 3 – முறையான ஆவணம் இல்லாததால், பள்ளிப் படிப்பை தொடர்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள, பத்து வயது மாணவி ஷிவானியின் குடும்பத்தாருடன், நெகிரி செம்பிலான் மாநில கல்வித் துறை சந்திப்பு நடத்தியுள்ளது.
அப்பிரச்சனைக்கு தீர்வுக் கண்டு, ஷிவானி தனது கல்வியை தொடர வழிகோலும் நோக்கில், டிசம்பர் 28-ஆம் தேதி அந்த சதிப்பு நடத்தபட்டதாக, கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
குறிப்பாக, ஆவண பிரச்சனைக்கு தீர்வுக் காணும் பரிந்துரைகள் சில அந்த சந்திப்பின் போது முன் வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், சம்பந்தப்பட்ட மாணவரின் பள்ளி பதிவு நடவடிக்கைகளை சுமூகமாக்கும் கடப்பாட்டை மாநில கல்வித் துறை கொண்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, குடியுரிமை ஆவணம் இல்லாததால் பள்ளிப் படிப்பை தொடர்வதில், சிரமத்தை எதிர்நோக்கியிருந்த ஷிவானி, தனது பிரச்சனைக்கு தீர்வுக் காண உதவுமாறு கோரி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு முன், செனாவாங்கிலுள்ள, தாமான் ஸ்ரீ பாகி ஆரம்ப பள்ளியில் முதலாம் ஆண்டு தொடங்கி மூன்றாம் ஆண்டு வரையில் பயின்ற ஷிவானி, முறையான அடையாள ஆவணம் இல்லாததால் நான்காம் ஆண்டு கல்வியை தொடர முடியாது என சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் கூறியதால், கல்வியை தொடர முடியாமல் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளார்.
ஷிவானியின் பெற்றோர், தங்கள் திருமணத்தை முறையாக பதிந்து கொள்ளாததால், அவர் குடியுரிமை சிக்கலை எதிர்நோக்கியுள்ளார்.