ஜோகூர்பாரு , ஜன 10 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அரசாங்கத்தை கவிழ்க்கும் துபாய் சதித்திட்டம் தோல்வியடையும் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி வருணித்திருக்கிறார். நேரத்தை விரயமாக்காமல் மக்களுக்கு சுபிட்சத்தை கொண்டுவரும் பணியில் அரசியல் கட்சியின் தலைவர்கள் ஈடுபட வேண்டுமென அம்னோ தலைவருமான ஸாஹிட் கேட்டுக்கொண்டார். பிரதமராக வேண்டும் அல்லது தங்களது கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவார் என பகல் கனவு காண்பவர்கள் அதனை மறந்துவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த காலத்தில் மூன்று நபர்கள் பிரதமரானதைத் தொடர்ந்து இது ஒரு நோயாக மலேசியர்களிடையே இருப்பதாக தாமான் கோத்தா ஜெயா தொடக்கப் பள்ளியில் வெள்ள நிவாரண மையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ஸாஹிட் தெரிவித்தார். பணவீக்கம் மற்றும் வேலையில்லா விகிதத்தை குறைத்து பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக முதலீடுகளை பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.