
கோலாலம்பூர், செப் 15 – ஏற்பாட்டாளர்கள் போதுமான தகவலை தெரிவிக்கத் தவறியதால் மலேசியாவை பாதுகாப்போம் பேரணியை தெரிவிக்கும் நோட்டிசை போலீசார் நிராகரித்துவிட்டனர். 2012 ஆம் ஆண்டின் பேரணி சட்டத்திற்கு ஏற்ப முறையான விதிமுறையை ஏற்பாட்டாளர்கள் நிறைவு செய்யவில்லை. ஏற்பாட்டாளரின் பெயர் மற்றும் அந்த பேரணி நடைபெறும் இடம் போன்ற அம்சங்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லையென புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குனர் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்தார். அந்த பேரணியில் பங்கேற்பவர்கள் தாங்கள் கூடும் இடத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
மேலும் ஏற்பாட்டாளர்களின் பெயர்களையும் தெரிவிக்க வேண்டும். இன்றுவரை எந்தவொரு அறிக்கையையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு கிடைத்த வேவு தகவலின்படி பேரணி தொடங்கும் இடத்தை அவர்கள் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இதற்கு முன் பேரணியை நடத்திய அனுபவத்தை அதன் ஏற்பாட்டாளர்கள் கொண்டிருந்தாலும் அவர்கள் முறையான தகவலை வழங்கவில்லையென டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஷுஹைலி தெரிவித்தார்.