ஷா அலாம், நவ 5 – நான்கு சிறுமிகளை மானபங்கப்படுத்தியதாக புகார்களை பெற்றதைத் தொடர்ந்து தற்காப்புக் கலை பயிற்சியாளருமான கல்லூரி மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.
வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ஷா அலாமிலுள்ள வர்த்தக தொகுதி ஒன்றில் அந்த 20 வயது மாணவன் கைது செய்யப்பட்டான். ஒன்பது வயது சிறுமியின் தாயார் புகார் செய்த அதே நாளன்று அந்த மாணவன் கைது செய்யப்பட்டதாக ஷா அலாம் போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேலும் மூவரிடமிருந்து போலீஸ் புகார் பெற்றதாகவும் அவர் கூறினார்.
தற்காப்பு கலை பயிலும் மையத்தின் கழிவறையில் 9 வயது சிறுமி மானப்பங்கப்படுத்தப்பட்டது தொடர்பில் நவம்பர் 2ஆம் தேதியன்று முதல் புகாரை போலீசார் பெற்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளும் 7 வயது முதல் 9 வயதுடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழி கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள தனியார் கல்லூரியின் மாணவன் ஆவான். கடந்த ஒர் ஆண்டு காலமாக அந்த மாணவன் தற்காப்புக் கலை பயிற்சியை வழங்கி வந்ததாக இக்பால் இப்ராஹிம் கூறினார்.