கோலாலம்பூர், டிசம்பர் 8 – தலைநகர், புக்கிட் ஜாலில் வளாகத்தில், மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திறக்கப்பட்ட போலீஸ் அபராத முகப்பை, இரண்டே மணி நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர்.
இன்று காலை மணி 10.30 வரையில், போக்குவரத்து அபராதத்தை செலுத்த, ஏறக்குறைய மூவாயிரத்து 200 பேர் அங்கு திரண்டதாக, அரச மலேசிய போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, புக்கில் ஜாலில் போலீஸ் முகப்பில் மட்டுமே, போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு கழிவு வழங்கப்படுகிறது.
அதனால், அந்த முகப்பு இன்று காலை மணி ஒன்பது தொடங்கி மாலை நான்கு மணி வரை திறந்திருக்கும்.
அபராத வசூலிப்பை தவிர்த்து, இணையம் வாயிலாக அபராதத்தை செலுத்தும் சிறப்பு பற்றுசீட்டும் அந்த முகப்பில் வழங்கப்படும்.
எனினும், இவ்வாண்டு இதுவரை பெறப்பட்ட போக்குவரத்து அபராதங்கள், விபத்து மற்றும் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் அபராதங்களுக்கு கழிவு வழங்கப்படாது.
இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள, மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவாண்டு விழாவை முன்னிட்டு, புக்கிட் ஜாலில் வளாகத்தில், மொத்தம் 14 அபராத முகப்புகள் செயல்படும்.