
ஷா ஆலாம், ஏப்ரல்-25, கல்வி விஷயத்தில் மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் வாயிலாக அரசாங்கம் 1 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
‘2025 செமாராக் மெம்பாச்சா புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டத்திற்காக அந்நிதி பயன்படுத்தப்படும்.
நாட்டின் புத்தகத் துறையை மேலும் மேம்படுத்த உள்நாட்டு செலவினங்களை ஊக்குவிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக, அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் கூறினார்.
மலேசிய மக்களிடையே வாசிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இம்முயற்சிக்கு அதிகாரப்பூர்வ மின் வணிகப் பங்காளியாக Shopee Malaysia விளங்குகிறது.
புத்தகப் பற்றுச் சீட்டு விநியோகம் உள்ளிட்ட அம்சங்களை அந்நிறுவனம் மேற்கொள்ளும்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் மாநில புத்தக விழாக்களில் இந்த செமாராக் மெம்பாச்சா புத்தகப் பற்றுச் சீட்டுகளைப் பெற முடியும்.
பொது மக்கள், உள்ளூர் புத்தகங்கள் அல்லது உள்நாட்டு வெளியீடுகளுக்கு மட்டும் ஒரே இரசீதில் குறைந்தபட்சம் 20 ரிங்கிட் அல்லது அதற்கு மேல் செலவழித்தால், 10 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச் சீட்டுகளைப் பெறலாம்.
ஏப்ரல் 22 முதல் வரும் டிசம்பர் 31 வரை, ஒருவர், ஒரு பற்றுச் சீட்டை மட்டுமே ரிடீம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் டத்தோ ஏரன் சொன்னார்