கோலாலம்பூர், ஜன 10 – கோலாலம்பூரில் செயல்பட்டுவந்த அனைத்துலக போதைப் பொருள் தயாரிப்பு மற்றும் விநியோகக் கும்பலை மலேசிய , ஹங்காங் போலீசார் முறியடித்தனர். கடந்த வாரம் கோலாலம்பூரில் உள்ள அடுக்ககத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஹங்காங் சந்தைக்கு விநியோகத்திற்கு தயாராய் இருந்த கணிசமான அளவைக் கொண்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஹங்காங் போதைப் பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் மூலம் கிடைக்கப்பெற்ற உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொண்டதன் மூலம் 74.03 கிலோ ரசாயன தூள், 7.41 கிலோ ஹெரோய்ன் மற்றும் மறு பொட்டலமிடுவதற்கான சாதனங்கள் கடந்த வாரம் ஜனவரி 5ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 7.89 மில்லியன் ரிங்கிட்டாகும் என போதைப் பொருள் குற்றவியல் விசாரணைத்துறையின் இயக்குனர்டத்தோ முகமட் கமருடின் மாட் டின் தெரிவித்தார்.
அந்த சோதனையின்போது ஹங்காங்கை சேர்ந்த ஆடவரும் , மங்கோலியாவைச் சேர்ந்த பெண்ணும் கைது செய்யப்பட்டததாக அவர் கூறினார். இந்த தகவலின்படி போதைப் பொருள் விநியோகிப்பில் ஈடுபட்டு வந்த 26 வயதுடைய ஆடவரையும் , பெண்ணையும் ஹங்காங் போலீசார் கைது செய்ததோடு 3.5 கிலோ ஹெரோய்னை பறிமுதல் செய்ததாக கமாருடின் கூறினார்.