புத்ரா ஜெயா, நவ 2 – சில இடங்களில் சீனி விநியோகத்தில் பிரச்னை இருப்பதை இடைக்கால உள்நாட்டு வாணிக, வாழ்க்கை செலவின அமைச்சர் அர்மிசான் அலி ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் எந்த இடங்களில் இந்த பாதிப்பு இருக்கிறது என்பது குறித்து விவரங்களை அவர் வெளியிடவில்லை. இறக்குமதிகள் வந்துகொண்டிருந்தாலும் ஒருவர் இரண்டு கிலோ சீனி வாங்குவதற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சில சூப்பர் மார்க்கெட்டுகளும் மளிகைக் கடைகளும் சீனி வாங்குவதற்கான கட்டுப்பாட்டை ஏற்கனவே அமல்படுத்தியுள்ளன. இதன்வழி சமூகத்தின் ஒவ்வொருவரும் சீனியை வாங்க முடியும் என அர்மிசான் அலி தெரிவித்தார். இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து பிரேசிலில் இருந்து 100 விழுக்காடு சுத்திகரிக்கப்படாத சீனியை மலேசியா கொள்முதல் செய்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.