கோலா லங்காட், பிப்ரவரி 7 – காரை நிறுத்துமாறு பணித்த JPJ சாலை போக்குவரத்து துறை அதிகாரிகளின் உத்தரவை பொருட்படுத்தாமல், இதர வாகனங்களை மோதித் தள்ளிய ஆடவன் ஒருவனை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.
அச்சம்பவம், கடந்த திங்கட்கிழமை, பிற்பகல் மணி 12.45 வாக்கில், சிலாங்கூர், பந்திங், தெலுக் பங்லிமா கராங்கில் நிகழ்ந்தது.
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள், சந்தேகிக்கும் வகையில் பயணித்த புரோட்டோன் வீரா ரக கார் ஒன்றை நிறுத்துமாறு பணித்துள்ளனர்.
எனினும், அதனை பொருட்படுத்தாது அக்காரை செலுத்திய ஆடவன், காரை வேகமாக செலுத்தி அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளான்.
எனினும், வாகன நெரிசலில் சிக்கிக் கொண்ட அக்காரை, அதிகாரிகளின் வாகனம் நெருங்கிய போது, திடீரென காரை பின்நோக்கி செலுத்திய அவ்வாடவன், சாலை போக்குவரத்து துறை வாகனத்தையும், பொதுமக்களின் வாகனங்களையும் மோதித் தள்ளினான்.
அக்காரின் வலதுபுற ஓட்டுனர் கதவை, அதிகாரிகளின் வாகனம் மறித்து நிறுத்தப்பட்ட போதிலும், அவ்வாடவன் காரின் இடதுபுற கதவு வாயிலாக, அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் ஓடி மறைந்ததாக கூறப்படுகிறது.
அதே நாள், பிற்பகல் மணி 2.45 வாக்கில், அச்சம்பவம் தொடர்பில் போலீசார் புகாரை பெற்ற வேளை ; சம்பந்தப்பட்ட ஆடவன் தேடப்பட்டு வருகிறான்.