Latestமலேசியா

பெர்சத்து எம்.பி.க்களின் ஆதரவு ஆட்சி மாற்றம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது – ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

கோலாலம்பூர், நவ 10 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து வரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினால் கடந்த ஆண்டு நவம்பரில் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசு விரைவில் முடிவுக்கு வரும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நால்வரின் அண்மைய ஆதரவுடன் ஒற்றுமை அரசாங்கம் தற்போதைய 222 நாடாளுன்ற உறுப்பினர்களில் 151 பேரின் ஆதரவைப் பெற்றுள்ளது. இதன்வழி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ளது.

கூட்டரசு அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் மற்றும் கொள்கைகள் தொடர்வதை அனுமதிக்க ஆதரவு தேவை என்ற நம்பிக்கையில் பிரதமரை ஆதரிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கலாம் என பினாங்கு அறிவியல் பல்கலைக்கழத்தை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் டத்தோ டாக்டர் சிவமுருகன் பாண்டியன் தெரிவித்திருக்கிறார். நல்ல செயல்திட்டம் வருவதை உறுதிசெய்ய இது அவருக்கு ஒரு வகையான தார்மீக மற்றும் அரசியல் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குகிறது என அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே அரசாங்கம் நிலையானது என்பதை நிரூபிப்பதற்கு அண்மைய அரசியல் மாற்றம் வழிவகுத்திருப்பதாக ஜனநாயகம் மற்றும் தேர்தல்களுக்கான மலாயா பல்கலைக்கழக மையத்தைச் சேர்ந்த சமூக அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் டாக்டர் அவாங் அஸ்மான் அவாங் பாவி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த இந்த எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு தொடர்ந்து சேவைகளை மேம்படுத்த முடியும் என்றும் டாக்டர் அவாங் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!