கோலாலம்பூர், டிச 12 – மணிலாவில் வேலை செய்து வந்த மலேசியர் ஒருவர் கடத்தப்பட்டதோடு அவரது விடுதலைக்காக 330,000 ரிங்கிட் பிணைப்பணம் வழங்கப்பட்ட போதிலும் அவர் கொலை செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைத்துறையின் இயக்குனர் ரம்லி யூசுப் தெரிவித்திருக்கிறார். USDT கிரிப்டோவாலட் (cryptowallet) விண்ணப்பம் மூலமாக பிணைப்பணம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். அக்டோபர் 22 ஆம் தேதி கடத்தப்பட்ட அந்த ஆடவரின் விடுதலைக்கான மறுநாளே பிணைப்பணம் கொடுக்கப்பட்டது.
அன்றைய தினமே பாம்பங்காவில், சான் சைமன் என்னுமிடத்தில் அந்த நபரின் உடலை பிணைப்பணம் கொடுக்கப்பட்ட தினத்தில் பிலிப்பின்ஸ் அதிகாரிகள் கண்டுப்பிடித்ததாக ரம்லி கூறினார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிக்கு கிரிப்டோவாலட் பட்டுவாடா மூலம் பணம் பெறப்பட்டது குறித்து உதவும்படி மணிலாவில் “Malawakil” தூதரக அதிகாரி மூலம் நவம்பர் 9ஆம் தேதி மலேசிய போலீசிற்கு அழைப்பு கிடைத்தது. மலேசியாவில் பதிவு செய்யப்படாத நாணய பரிமாற்ற நிறுவனத்திடமிருந்து பிணைப்பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரம்லி கூறினார். இந்த விவகாரத்தில் வெளிநாட்டு சந்தேகப் பேர்வழிகள் அறுவர் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவலைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.