
குவாலா சிலாங்கூர், ஆகஸ்ட்டு 28 – மனைவி விவாகரத்து கேட்டதால், மனமுடைந்த 50 வயது ஆடவர் ஒருவர், 12 மீட்டர் உயரமுள்ள விளம்பர பலகையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்பவம் தொடர்பில், இன்று காலை மணி 8.35 வாக்கில், பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு மீட்புப் படை வீரர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.
உனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படை உறுப்பினர்கள், 12 அடி உயரத்தில், வெறித்தனமாக காணப்பட்ட ஆடவர், கீழே குதிக்க போவதாக மிரட்டல் விடுத்தவாறு இருப்பதை கண்டனர்.
எனினும், சுமார் இரண்டு மணி நேர அமைதிப்படுத்தும் முயற்சிக்கு பின்னர், அவ்வாடவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
அவ்வாடவரின் மனைவி மற்றும் நண்பர்களின் உதவியோடு, அவரை அமைதிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.