சுபாங் ஜெயா, ஜனவரி 15 – சிறுவர்கள் விளையாடும் பகுதியில், ஆடவன் ஒருவன் அமர்ந்து வேலை செய்யும் காணொளி வைரலாகி, விமர்சனங்களை தூண்டியுள்ளது.
சிலாங்கூர், எம்பாயர் சுபாங்கிலுள்ள (Empire Subang), கிட்ஸூனாவில் (Kidzoona) அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
சிறார் விளையாடும் பகுதியில், ஆடவன் ஒருவன் அமர்ந்து கடுமையான வேலைகளில் ஈடுபடும் காணொளியை, பெண் ஒருவர் தனது சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
“நேற்று நாங்கள் கிட்ஸூனாவிற்கு சென்றிருந்த போது, அங்கு ஆடவன் ஒருவன், பல்வேறு கைப்பேசிகளுடன், சிறுவர்கள் விளையாடும் பகுதியில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தார். அது குறித்து, அங்கிருந்த பணியாளர்களிடம் தெரிவித்தோம். அவர்கள், அவ்வாடவனை அங்கிருந்து வெளியேறி செல்லுமாறு பணித்த போதும், அவ்வாடவன் அதனை பொருட்படுத்தவே இல்லை” என அப்பெண் பதிவிட்டுள்ளார்.
அதோடு, அங்கிருந்து வெளியேற முடியாது என அவ்வாடவன் கூறியதாகவும், பணியாளர்கள் அப்பெண்ணிடம் வந்து சொன்னது நிலைமையை மேலும் இறுக்கமடையச் செய்ததாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில், அப்பெண் பதிவேற்றம் செய்த காணொளியை இதுவரை ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை ; சிறார்கள் விளையாடும் இடத்தை அவன் ஏன் வேலை செய்யும் இடமாக தேர்வுச் செய்தான் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.