கோலாலம்பூர், பிப் 3 – பினாங்கு, பத்து உபான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ரவீந்திரனுக்கு எதிராக சர்ச்சைக்குரிய முஸ்லிம் போதகர் டாக்டர் ஸாக்கிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கு நேற்று பினாங்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையின்றி தீர்க்கப்பட்டது. ஸாக்கிர் நாயக் இணைய நடவடிக்கை வாயிலாக தனக்கு ஆதரவாக ஒரு ஒப்புதல் தீர்ப்பை நீதித்துறை ஆணையர் கென்னத் யோங் முன்னிலையில் பதிவு செய்ய ஒப்புக் கொண்டார். அந்த ஒப்புதல் உடன்பாட்டில் காணப்பட்ட விதிமுறைகள் ரகசியமானது என ஸாக்கிர் நாயக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அக்பர்டின் அப்துல் காதர் தெரிவித்தார். ரவீந்திரன் சார்பில் வழக்கறிஞர் T. தருமராஜா மற்றும் கர்னைல் சிங் ஆகியோர் ஆஜராகினர்.
2019 ஆம் ஆண்டு அக்டோபர் 13 மற்றும் 17-க்கு இடையில் ஐந்து அவதூறு அறிக்கைகளை தமது முகநூலில் ரவிந்திரன் பதிவேற்றியதால் அவருக்கு எதிராக ஸாக்கிர் நாயக் வழக்கு தொடர்ந்தார். அந்த ஐந்து அறிக்கைகளும் தம்மிடம் உறுதிப்படுத்தாமல், வெறுப்பு மற்றும் பொறாமையுடன் செய்யப்பட்டவை என்று கூறினார். ரவீந்திரன், தன்னை ஒரு தீங்கிழைக்கும் நபராகவும், நாட்டின் பாதுகாப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாகவும், பதிவுகள் மூலம் சித்தரித்ததாக ஸாக்கிர் நாயக் தமது வழக்கு மனுவில் கூறியிருந்தார். அந்த ஐந்து அறிக்கைகளும் முற்றிலும் ஆதாரமற்றவை, உண்மையற்றவை, கட்டுக்கதைகள் மற்றும் பொய்யானவை என்றும் ஸாக்கிர் நாயக் சுட்டிக்காட்டியிருந்தார்.