கோலாலம்பூர், மார்ச் 15 – நெரிசல் பிரச்சனைக்கு தீர்வுக் காண, சைபர்ஜெயா தேசிய பள்ளியில், பதிந்து கொண்டுள்ள, முதலாம் ஆண்டு மாணவர்களை, அருகிலுள்ள இதர பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு இடமாற்றம் செய்யும்.
அப்பிரச்சனைக்கு தீர்வு காணும் குறுகிய கால நடவடிக்கையாக, கூடுதல் வகுப்பறைகளை அமைக்க, 12 தற்காலிக “காபின்” அறைகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, நீண்ட கால தீர்வாக, 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ், இரண்டாவது சைபர்ஜெயா தேசிய பள்ளியை கட்டும் பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டு, கொள்முதல் செயல்முறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
36 வகுப்பறைகளுடன் கூடிய அப்புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகள் 2028-ஆம் ஆண்டு நிறைவடையென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சைபர்ஜெயா தேசியப் பள்ளியில், அளவுக்கு அதிகமான முதலாம் ஆண்டு மாணவர்களின் நெரிசலான சூழ்நிலையை சித்தரிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.
அப்பள்ளியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக 13 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ள வேளை ; அவை ஒவ்வொன்றிலும் 50 மாணவர்கள் இருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.