காஸா, ஜன 20 – காஸா முனையிலுள்ள தென் பகுதி நகரிலுள்ள கான் யுனுஸ் மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாலஸ்தீன செம்பிறைச் சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கிறது. இந்த தாக்குதலினால் அந்த மருத்துவமனையின் சுகாதார நலன் வசதிகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் ராணுவம் ட்ரோன்களை பயன்படுத்தி மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதல் பலர் காயம் அடைந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது காஸாவில் இன்னமும் செயல்பட்டுவரும் ஒரே மருத்துவமனையை நோக்கி இஸ்ரேல் டாங்குகள் நெருங்கி வருவதாக கூறப்பட்டது. கான் யுனுஸ் நகரை கைப்பற்றுவதற்காக பெரிய அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் தெரிகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 142 பாலஸ்தீனர்கள் உயிர் இழந்ததோடு 278 பேர் காயம் அடைந்தனர். மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றுரும் இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் இதுவரை 24,762 பாலஸ்தீனர்கள் மரணம் அடைந்தனர். காஸாவிலுள்ள 36 மருத்துவமனைகளில் பெரும்பாலானவை இயங்கவில்லை. 15 மருத்துவமனைகளில் மட்டுமே ஒரு பகுதி செயல்பட்டுவருவதாக WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.