மலேசியக் கிண்ணத்தை JDT வென்றது; இறுதியாட்டத்திற்கு முன்புவெளியில் இரசிகர்கள் மோதல்

புக்கிட் ஜாலில், ஏப்ரல்-27- புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்ரங்கில் நேற்றிரவு JDT – பஹாங் இடையிலான மலேசியக் கிண்ணக் கால்பந்து இறுதியாட்டம் தொடங்கும் முன்னர், வெளியில் இரசிகர்கள் மோதிக் கொண்டனர்.
இரு தரப்பினரும் தள்ளுமுள்ளுவில் இறங்க, kon எனப்படும் பாதுகாப்பு கூம்புகளும் பறந்தன.பட்டாசுகளும் வீசப்பட்டதால் நிலவரம் மோசமானது.எனினும் பாதுகாப்பு அதிகாரிகள் தலையிட்டு நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இரு அணிகளும் திடலில் மோதிக் கொள்ளும் முன்னர் அவற்றின் இரசிகர்கள் வெளியில் மோதிக் கொண்ட வீடியோக்கள் முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலாகின.
இவ்வேளையில் அந்த இறுதியாட்டத்தில் பலரும் எதிர்பார்த்தபடி JDT-யே வாகை சூடியது.
முதலில் பின்தங்கினாலும் கடைசியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் மலேசியக் கிண்ணத்தை அது தற்காத்துக் கொண்டது.
பஹாங்கின் கோலை T. சரவணன் போட்டார்.
JDT இப்பருவத்தில் ஏற்கனவே Charity Shield, FA கிண்ணம், சூப்பர் லீக் கிண்ணம் என 3 முக்கியக் வெற்றியாளர் பட்டங்களை வென்று விட்ட நிலையில், எஞ்சியிருந்த இந்த மலேசியக் கிண்ணத்தையும் இப்போது கைப்பற்றியுள்ளது.
அதே சமயம் ‘triple treble’ எனப்படும் ஒரே பருவத்தில் 3 முக்கியக் கோப்பைகளை 3 முறை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் JDT படைத்துள்ளது.
சூப்பர் லீக், FA கிண்ணம், மலேசியக் கிண்ணம் ஆகியவற்றை ஒரே பருவத்தில் வென்றால் Treble என அழைக்கப்படும்.