
கோலாலம்பூர், நவ.11 – நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு இந்த நாட்டில் கலாச்சார பன்முகத்தன்மை தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பரஸ்பர மரியாதை மற்றும் இனங்களுக்கிடையில் இணக்கமான உறவுகள் மூலம் மடானி மலேசியா கோட்பாட்டை வளர்ப்பதற்கான பாதைகளில் தீபாவளி கொண்டாட்டமும் ஒன்றாகும் என்று அவர் கூறினார். பல இன மக்களைக் கொண்ட கலச்சாரம் மலேசியாவின் பன்முகத்தன்மையாக விளங்குகிறது.
சமுதாயத்தின் முக்கிய அங்கமாக திகழும் இந்த தனித்துவத்தை வலுவிழக்கச் செய்யும் எந்தவொரு முயற்சியும் உயர் மதிப்புகள் மற்றும் அறநெறிகளால் முறியடிக்கப்பட வேண்டும் என்று தமது தீபாவளி வாழ்த்து செய்தியில் அன்வார் கேட்டுக்கொண்டார்.
ஒற்றுமை அரசாங்கம் அனைத்து மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும், மேலும் சீரான சொத்து விநியோகத்தையும் உதவியையும் உறுதி செய்யும் என்றும் பிரதமர் கூறினார். நாட்டின் செல்வத்தை மக்கள் நியாயமாகவும், சமமாகவும் அனுபவிப்பதை உறுதி செய்வதில், மக்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் தரம், குறிப்பாக இந்திய சமூகம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்படும் என்றும் அன்வார் கூறினார்.