கோலாலம்பூர் , டிச 27 – பெரிய அளவில் வருமானம் கிடைக்கும் என தங்க முதலீடு திட்ட நிறுவனம் அளித்த வாக்குறுதியை நம்பி சபா, தாவாவை சேர்ந்த பெண் வர்த்தகர் லியானா ஃபிரிஸ்கா ராம்லீ, 3.17 மிலியன் ரிங்கிட்டை இழந்துள்ளார். தம்மைத் தவிர அந்த தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்த இதர 300க்கும் மேற்பட்டோர் 2.18 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த தங்க முதலீட்டு நிறுவனத்தின் பிரதிநிதி என பெண் ஒருவர் கூறிக்கொண்டதைத் தொடர்ந்து முதலீடு செய்தவர்களில் பலர் அவரிடம் பணத்தை வழங்கியதாக லியானா தெரிவித்தார்.
ஒவ்வொரு கிரேம் தங்கத்திற்கான முதலீட்டிற்கும் முதல் 10 நாட்களில் 5 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வருமானம் அல்லது ஒவ்வொரு கிரேம் தங்க முதலீட்டிற்கும் 25 ரிங்கிட் வருமானம் கிடைக்கும் என்றும் உடன்பாட்டிற்கு ஏற்ப மூலதன தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படும் என கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட முதலீட்டு நிறுவனத்திற்கு எதிராக டிசம்பர் 14ஆம் தேதி தாம் புகார் செய்திருப்பதாகவும் லியானா கூறினார். இதனிடையே தங்க முதலீட்டு திட்டத்தில் பணத்தை இழந்தவர்களிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதை தாவாவ் போலீஸ் தலைவர் ஜாஸ்மின் ஹுசின் உறுதிப்படுத்தினார்.