கோலாலம்பூர், டிச 24 – கில்லிங் என இனத்துவேச வார்த்தையை அண்மையில் பயன்படுத்தியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பது குறித்து ம.இ.காவும், தாமும் தனிப்பட்ட முறையில் வரவேற்பதாக ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மலேசிய இந்தியர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு தாம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பியிருப்பதாகவும் இனி அன்வாரிடமிருந்து இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாது என்று நம்புவதாக சரவணன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வரலாற்று பின்னணியில் இருந்து தான் பேசுவதாக பிரதமர் கூறியிருந்தாலும், அந்த வார்த்தை இழிவானதாக கருதப்படுவதால், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மஇகா, தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் போது, மலேசிய இந்திய சமூகத்தின் பெருமை மற்றும் நலனைப் பாதுகாப்பதில் ஒதுங்கி நிற்காது என்று சரவணன் தெரிவித்துள்ளார்.
நமது பிரதமருக்கு இந்த வார்த்தையைக் கூறுவதில் எந்தவிதமான துவேஷமும் இல்லையென்றாலும், கடந்த பொதுத் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவளித்த இந்திய சமூகத்தின் உணர்வுகளை அது நிச்சயமாக புண்படுத்தியிருக்கிறது என சரவணன் சுட்டிக்காட்டினார்.
ஒரு கருத்தரங்கில் பிரதமர் தமிழ் மொழியை ‘பஹாசா கெலிங்’ என்று குறிப்பிடும் காணொளி பரவலாகப் பரப்பப்பட்டு மலேசிய இந்திய சமூகத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.