கோலாலம்பூர், ஜன 10 – ஜோகூரில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்துள்ளதோடு நேற்றிரவு 8 மணிவரை 7,947 பேர் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக Nadma எனப்படும தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனத்தின் கட்டுப்பாடு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அவர்கள் அனைவரும் 52 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். கோத்தா திங்கியில் மட்டும் 26 நிவாரண மையங்களில் 4,705 பேர் தங்கியுள்ளனர், மேலும் ஜோகூர் பாருவில் 11 நிவாரண மையங்களிலும், குளுவாங்,செகாமட், கூலாய், பொந்தியான் ஆகிய மாவட்டங்களில் உள்ள நிவாரண மையங்களிலும் வெள்ள அகதிகள் தங்கியுள்ளனர். ஜோகூரிலுள்ள ஆறுகளில் நீர் மட்டம் தொடர்ந்து அபாய கட்டத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகாங்கில் வெள்ளத்தினால் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 450-ஆக குறைந்துள்ளது. அவர்கள் அனைவரும் ரோம்பின், பெக்கான் மற்றும் மாரானில் உள்ள 21 நிவாரண மையங்களில் இருந்து வருகின்றனர்.