செப்பாங், ஜன 12 – தற்போது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இடம்பெற்றுள்ள ‘மேன் ஆன் தி ரன்’ (Man on the Run) என்ற 1MDB ஊழல் தொடர்பான ஆவணப் படத்தை அகற்றுவதா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை தொடர்பு அமைச்சிடமே விட்டுவிடுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். 1MDB நிதி முறைகேடு தொடர்பான அம்சங்களை கொண்டுள்ள அந்த ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இடம்பெறக்கூடாது என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் கேட்டுக் கொண்டது தொடர்பில் அன்வார் கருத்துரைத்தார். நஜீப்பின் கோரிக்கையை பரிசீலிப்பது தொடர்புத்துறை அமைச்சின் வேலையாகும் என அன்வார் தெரிவித்தார்.
நஜீப் தொடர்பான வழக்கு இப்போது நடைபெற்று வரும்போது தற்போது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு மணி நேரத்தைக் கொண்ட இந்த ஆவணப் படம் நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருக்கிறது என இதற்கு முன் நஜீப்பின் வழக்கறிஞரான டான்ஸ்ரீ முஹம்மட் ஷஃபீ அப்துல்லா தெரிவித்திருந்தார். அந்த ஆவணப் படத்தில் நேர்க்காணல் கொடுப்பவர்கள் நஜீப் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அவற்றில் ஒரு தலைப்பட்சமான கருத்துக்கள், பொய்யான அம்சங்கள், வழக்கிற்கு எதிராக இருப்பதை முஹம்மட் ஷஃபீ சுட்டிக்காட்டினார்.
உண்மையில், 1MDB வழக்கு உட்பட எந்தவொரு விசாரணையிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவண ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் மூலம் தனது கட்சிக்காரருக்கு எதிரான அறிக்கை எதுவும் நிரூபிக்கப்படவில்லை என அவர் கூறினார். மேன் ஆன் தி ரன்’ ஆவணப்படம் காசியஸ் மைக்கேல் கிம் என்பவரால் எழுதி ,இயக்கப்பட்டு, தயாரித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19 முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 1MDB ஊழலில் தனக்கு தொடர்பு இல்லை என்று நஜிப்பின் பேட்டியும், பிரதமர், சரவாக் ரிப்போட் ஆசிரியர் கிளேர் ரெவ்கேஸில்-பிரவுன் மற்றும் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான் ஸ்ரீ டாமி தாமஸ் ஆகியோரின் நேர்காணல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.