
கோலாலம்பூர், நவ 10 – பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் டாக்டர் ஸாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கில் தோல்வி கண்டனதைத் தொடர்ந்து இழப்பீடாக அவருக்கு 1. 52 மில்லியன் ரிங்கிட்டை வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்குள் இந்த தொகையை ராமசாமி ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக மலேசிய தமிழர் குரல் நிதி திரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த பல தரப்பட்ட மக்கள் வாரி வழங்கிய நிதியினால் ஏழு நாட்களில் 1.52 மில்லியன் ரிங்கிட் திரட்டும் முயற்சியில் தமிழர் குரல் இயக்கம் வெற்றி பெற்றது. திரட்டப்பட்ட இந்த பணத்திற்கான காசோலையை மலேசிய தமிழர் குரல் அமைப்பிடமிருந்து பெற்றுக்கொண்ட ராமசாமி, வழக்கறிஞர் முரளி நவரத்தினம் வழக்கறிஞர் நிறுவனத்தின் வழக்கறிஞர் பெலிக்ஸ் லிம்மிடம் இன்று ஒப்படைத்தார்.
இந்த பணம் பின்னர் ஸாகிர் நாயகின் வழக்கறிஞரிம் ஒப்படைக்கப்படும்.
உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து டாக்டர் ராமசாமி மேல் முறையீடு செய்துள்ளதால் அவற்றின் முழுமையான தீர்ப்பு கிடைக்கும்வரை இப்பணம் வழக்கறிஞர் நிறுவனத்தின் பாதுகாப்பில் இருக்கும். மேல் முறையீட்டின் முடிவு தெரியும்வரை இந்த தொகையை வாதியான டாக்டர் ஸாகிர் நாயக் பயன்படுத்த முடியாது. இந்த வேளையில் தமக்கு உதவும் பொருட்டு முகம் தெரியாத பலர் நன்கொடை அளித்துள்ளதால் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் டாக்டர் ராமசாமி நன்றி தெரிவித்துக்கொண்டதோடு இந்திய சமூகத்தின் உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க தயங்கப்போவதில்லையென தெரிவித்தார்.