கோலாலம்பூர், நவம்பர் 28 – அண்டை நாடுகளான சிங்கப்பூர், புருனே உட்பட பிரச்னை குறைந்த 23 நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்களுக்கு நீண்ட கால “Sosial Visit Pass” எனப்படும் சமூகப் பயணப் பாஸ்களை மலேசியா வழங்கவிருக்கிறது . இந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இந்த புதிய கொள்கை தொடங்கும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார். இந்த பாஸ் மூலம் மாணவர்கள் தங்கள் படிப்பு, பயணம் மற்றும் நாட்டின் சட்டங்களின்படி அனுமதிக்கப்படும் வேலைத் துறைகளில் பகுதிநேர வேலை செய்ய முடியும் என அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் , பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு சிற்றரசு உட்பட குறைந்த பிரச்சனைகளை கொண்ட மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் சைபுடீன் தெரிவித்தார். மலேசியாவின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் நாட்டின் புதிய விசா தாராளமயமாக்கல் திட்டத்திற்கான உள்துறை அமைச்சின் ஐந்து முயற்சிகளில் ஒன்றாக இந்த நடவடிக்கை இருப்பதாக அவர் கூறினார். டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மலேசியாவிற்கு வருகை புரியும் சீனா மற்றும் இந்திய நாட்டினருக்கு 30 நாட்களுக்கு விசா இல்லாத நுழைவு என்ற புதிய கொள்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் 31 வரை சீன மற்றும் இந்திய குடிமக்களுக்கு 30 நாள் விசா விலக்கு அளிக்கப்படவுள்ளது.