ஷா ஆலாம், பிப்ரவரி 6 – சிலாங்கூருக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான எல்லை நிர்ணயம், 2025-ஆம் ஆண்டுக்குள் முடிவடையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எல்லை நிர்ணயம் மிகவும் முக்கியமானது. ஒன்றோடு ஒன்று முரண்படாமல் இருக்கவும், கவனிக்கப்படாமல் அல்லது தெளிவான பிரிவு இல்லாமல் இருக்கும் நிலங்களை நிர்வகிக்கவும் அது அவசியம் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இதுவரை, கோம்பாக், அம்பாங் மற்றும் ஹுலு லங்காட் உள்ளிட்ட 19 பகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டிருப்பதாகவும், மற்ற பகுதிகள் தொடர்பில் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமிருடின் சொன்னார்.
வரி வசூல், நில வரி, வாயில் வரி உட்பட அமலாக்கம், பராமரிப்பு மற்றும் பயன்பாடுகளுக்கும் எல்லை நிர்ணயம் அவசியமாகிறது.
எனினும், எல்லை நிர்ணயத்திற்கும் தேர்தல் பகுதிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை அமிருடின் தெளிவுப்படுத்தினார்.
முன்னதாக, சிலாங்கூருக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான எல்லை நிர்ணயம் தொடர்பில், கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா உட்பட சமந்தப்பட்ட இதர நிறுவனங்களுடன் அமிருடின் சந்திப்பு நடத்தினார்.