
கோலாலம்பூர், ஆக 22 – கெடா மந்திரிபெசார் Sanusi Nor மாநில ஆட்சிக் குழுவில் 8 துறைகளுக்கு தலைமையேற்றிருப்பதை அம்னோ சாடியது. அவர் தம் வசம் வைத்திருக்கும் பொறுப்புக்களை மற்ற ஆட்சிக்குழு உறுப்பினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான Fuad Zarkasi தெரிவித்தார். மாநிலத்தின் நலன்கள் மற்றும் கொள்கைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் சனுசியின் கடமைகளில் சம்பந்தப்பட்டிருப்பதால் எட்டு துறைகளுக்கு அவர் பொறுப்பேற்றிருப்பது அளவுக்கு மீறியதாக இருக்கிறது. நில வளங்கள் மற்றும் நிதி தொடர்பான இரண்டு முக்கிய பொறுப்புகளுக்கு மட்டுமே சனுசி தலைமையேற்க வேண்டும் என புவாட் ஆலோசனை தெரிவித்தார்.
இதன் வழி மாநிலத்தின் இலக்கு மற்றும் கொள்கைகளை அவர் கட்டுப்படுத்த முடியும். ஆட்சிக் குழுவின் பொறுப்புக்களை தம் வசம் வைத்திருப்பதால் அனைத்திலும் அவர் கவனம் செலுத்த முடியாது. கடந்த காலத்திலும் ஆட்சிக்குழுவின் பல பொறுப்புகளை சனுசி வைத்திருந்ததன் காரணமாக கெடாவில் அரிய மண் திருடு குறித்தும் அவர் அறிந்திருக்கவில்லை என்று Fuad zarkasi சுட்டிக்காட்டினார். மாநில அரசாங்கத்தில் பெர்சத்துவைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதற்காக அவர் எட்டு துறைகளுக்கு தலைமையேற்றிருக்கலாம் என Fuad Zarkasi தெரிவித்தார். மாநில திட்டமிடுதல், கனிமம் மற்றும் நிலவியல் அறிவியல் , நிதி ,மாநில அரசாங்கம் தொடர்பான நிறுவனங்கள், மாநில பொருளாதார நடவடிக்கை மன்றம் , மேம்பாடு மறறும வெளி விவகாரங்கள் ஆகிய துறைகளுக்கு சனுசி பொறுப்பேற்றுள்ளார்.