பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 27 – மித்ரா – மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவின், நம்பகத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்த, அதனை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அறிவிக்க வேண்டும் எனும் பரிந்துரையை, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ் அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளார்.
சட்டப்பூர்வ அமைப்பு என்ற அங்கீகாரத்தை பெற்றால், மித்ரா அதன் வாரியத்திடமும், பிரதமரிடமும் நேரடியாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதையும், கணபதிராவ் சுட்டிக் காட்டினார்.
மித்ரா சட்டப்பூர்வ அமைப்பாக அறிவிக்கப்பட்டால், அதற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பான அறிக்கைகள், அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் வாயிலாக அந்த இந்தியர் உருமாற்ற பிரிவுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை நிர்வகிக்கும் நடைமுறைகளில், நம்பகத்தன்மையும், வெளிப்படைத் தன்மையும் அதிகரிக்கும்.
மித்ராவின் செயல்பாடுகள் அனைத்தும், இந்திய சமுதாயத்தின் உயர்மட்ட தலைவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் அதன் வாரியத்தால் துல்லியமாக கண்காணிக்கப்படும் என ஓர் அறிக்கையின் வாயிலாக கணபதிராவ் தெரிவித்தார்.
மித்ரா, மீண்டும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் வைக்கப்படும் என கடந்த வாரம் தகவல் வெளியானது.
தற்போது, அது பிரதமர் துறையின் நேரடி மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய சமூகத்தின் சமூக – பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண ஏதுவாக அமைக்கப்பட்ட அந்த சிறப்புப் பிரிவை, தாம் தொடர்ந்து கண்காணிக்க விருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.