
கெடா, ஜனவரி 18 – இந்திய மாணவர்களுக்கும் நிதிச் சுமையை எதிர்நோக்குகின்ற மாணவர்களுக்கும் கல்வி உதவியாக MIED Care உபகாரச் சம்பள வாய்ப்பை ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
ம.இ.காவின் தேசிய தலைவரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தருமான டான் ஸ்ரீ எஸ்.ஏ விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையில், தற்போது, ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஏய்ம்ஸ்ட்டில் கல்வி பயின்று வருகின்றனர்.
அவ்வகையில், இந்த ஆண்டில் 19 பட்டப்படிப்புகளுக்கான 722 மாணவர்கள், MIED Care உபகாரச் சம்பள வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வில் நேற்று கலந்துகொண்டனர்.
மாணவர்களின் ஆவணங்கள், குடும்ப நிதி நிலை, மற்றும் கல்வித் தகுதிகள் நேர்த்தியான முறையில் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது.
சிறந்த கல்வி கற்க, தங்களின் நிதிச் சுமையை குறைக்க இந்த உபகாரச் சம்பளம் பெரும் பங்கு வகிக்கும் என மாணவர்கள் சிலர் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
MIED Care உதவித் திட்டம் மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டான் ஸ்ரீ விக்கினேஸ்வரன் தலைமையில், சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்ய செயல்பட்டு வருகிறது என்றால் மிகையாகாது.