கோலாலம்பூர், ஜன 2 – 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை இரண்டு முன்னாள் பிரதமர்கள் நிர்வாகத்தின்போது அறிமுகம் மற்றும் விளம்பர பிரச்சாரங்களுக்கு 700 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரணையை தொடங்கியது. நேற்று நிதி அமைச்சு மற்றும் பிரதமர்துறை அலுவலகங்களுக்கு விசாரணை மற்றும் தகவல்களை பெறுவதற்கும் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆவணங்களை திரட்டுவதற்கும் MACC அதிகாரிகள் சென்றதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்தன. 2020ஆம் ஆண்டு முதல் அறிமுக மற்றும் விளம்பர நடவடிக்கைக்காக அரசாங்கம் எவ்வளவு செலவிட்டது என பத்து நாடாளுமன்ற உறுப்பினர் P. பிரபாகரன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் பிரதமர் வழங்கிய பதிலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது.
அச்சக பிரசுரங்கள், இலக்கவியல் ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அரசாங்கத்தின் சாதனைகளை அறிமுகப்படுத்துவற்கும் அவற்றின் விளம்பரத்திற்காகவும் 700 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டதாக அன்வார் வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து MACC விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த பணம் எப்படி செலவழிக்கப்பட்டது மற்றும் முறையான விதிகள் பின்பற்றப்பட்டனவா என்பதை கண்டறிவதற்கு முன்னோடி விசாரணை அமையும் என MACC-க்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணையை MACC-யின் மூத்த விசாரணை அதிகாரி டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹாஷிம் உறுதிப்படுத்தியபோதிலும் அவர் மேல் விவரங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை